வியாழன், 18 ஏப்ரல், 2019


எண்ணமாயிரு - என்னமாவது இரு ஆனா நல்லவனாயிரு விஞ்ஞான மெய்ஞானப் பார்வை 2. அகமும் புறமும் எவ்வாறோ, அகம் அவ்வாறே எண்ணத்தின் அறமே, சிந்தனை அறம், சிந்தனை அறமே செயலின் அறமாகும். புறமனத்தில எழும் எண்ணங்கள் நடு மனத்தில் நினைவலைகளாக, சிந்தனைகளாக இருந்து மேலும் அதுவே ஆழ்மனதிற்கு செல்லும் போது நம்பிக்கையாக மாறி அதுவே மனப்பாங்காக மாறியும் ஆளுமையாகவும் வெளிப்படுகின்றது, திரும்ப திரும்ப எண்ணப்படும் ஒன்று தரப்பதிவாக மாறி வித்தில் கலந்து கருமையத்தில் பதிந்து பல தலைமுறைக்கு அவ்வெண்ணம் பயணிக்கிறது பின்பு வாய்ப்பு கிட்டும் போது செயலாக மாறுகிறது அல்லது செயலாக மலர்த்த மனதை உந்தி தள்ளுகின்றது இந்த விசயத்தை தர்க்கமின்றி நன்றாக மனதில் திரும்ப திரும்ப சிந்தித்து பதித்துக் கொள். உன்னை சுற்றிலும் பார், பிறகு அகத்திலும் பார், எவ்வகை எண்ணத்துடன் பயணிக்கிறாய், என்ன வகையான உணர்வுடைய மக்களுடன் பழகுகிறாய், பேசுகிறாய் என்றும் பார், அதுபோல உன்னுடன் யார் யார் என்ன வகையான உணர்வுடைய நட்புகள், உறவுகள் அமைந்துள்ளன என பார்த்துக் கொள். இது வெறும் ஒப்பீடல்ல உன்னுடைய அகச் சுத்தத்தை தராசு கொண்டு நிர்ணயிக்க மட்டுமே அப்படியான அளவீட்டை பார்க்கும் போது அது பொது நியதியான, துன்பம் விளைவிக்காத தன்மையான எண்ணமாக உள்ளதாவென அளவிடு, அதாவது அகத்தினால் புறமும் புறத்தினால் அகமும் உருவானதை சூட்சுமத்தை அறிந்து கொள். அகத்தை உறுதி செய்ய எண்ணத்தை வலிமை படுத்து, நல்ல எண்ணத்தில் திளைக்கச் செய் நல்ல அற நெறிகளை விரும்பி ஏற்று மனதில் தழைக்கச் செய். என் வாழ்க்கையின் அனுபவங்களிலிருந்தே இதை சொல்கிறேன் கேள். எனக்குச் சிறு வயது முதலே அச்சம் கொள்வது இயல்பாகி இருந்து வந்தது ஒரு பத்து வயது வரை இதுமாதிரியான எண்ணங்கள் வரும். அந்த தருணத்தில் எனக்கு சூட்டுக்கார சோமு தாத்தாவினது பழக்கம் கிடைத்தது நண்பனுடன் சேர்ந்து வேட்டைக்குச் செல்ல கழிமுகமான அலையாத்திக் காட்டுக்குள் செல்ல பழக்கும் போது அவர் தொடர்ந்து அச்சப்பட கூடாது அச்சம் தவிர் என்று தைரியமான கதையாக சொல்லுவார் பாரதியின் அச்சமில்லை அச்சமில்லை பாடலை சொல்லிக் கொடுத்தார், குளிரான தண்ணியில என்னையத் தள்ளி விடச் சொல்லுவார், அடுத்த கரைக்கு தனியாக நீந்திச் செல்ல சொல்லுவார். உடலை பராமறிக்கச் சொல்லித்தருவார். அவரின் வழிகாட்டுதல் அப்போது நல்ல பாடமாக அமைந்தது. உனக்கான அகத்திலிருந்து புறப்படும் மலரின் வாசனையே உன்னைச் சுற்றியுள்ளவர்களுக்கு ஒரு வாசத்தை தந்து அவர்களை உன் பக்கமாக இணைக்கின்றது. புறம் அப்படியே இருக்கிறது அதை உனது அகமே வெவ்வேறாக மனதின் எண்ண எழுச்சிக்கு தகுந்தவாறு நினைவுகளாக அனுபோக, அனுபவ அடிப்படையில் பிரித்து வேறு படுத்தி பார்க்கின்றது. இந்த இடத்தில் உனக்கு ஒரு கேள்வி எழுந்து வரும் ஒரு தேளை பார்க்கிறோம் அது கொட்டுமென தோன்றுமே என்ன செய்வது, அது போல சக மனிதனை சந்தேக பார்வையில் பார்க்கும் பலகீனமான, குறுகிய எண்ணம் தோன்றுமே என்ன செய்வது ஒன்னும் செய்ய வேண்டாம் எவ்வகையான எண்ணம் தோன்றினாலும் சிறிது நேரம் அமைதியாக கவனித்து உணர்வுகளை உற்றுக் கவனிக்க அதுவும் சக உயிர்தானே இப்பிரபஞ்சத்தில் அதுவும் ஒரு படைப்புதானே அது தன் வாழ்வியல் தகவமைத்து நகர்ந்து செல்கிறதென நினைத்துப் பார்த்தால் அதற்கான வாழ்க்கைக்கு சம அளவில் இடம் கொடுத்தால் அது ஏன் நம்மை கொட்டுவதற்கு வர போகிறது. அது போலவே சக மனிதனையும் நினைக்க வேண்டும் தன்னை, தன் அதிகாரத்தை நிறுவ நினைக்கும் உனக்கு கீழே ஒருவர் தேவை படுவதாலும், எதையோ எதிர் பார்த்தும், ஒரு பாதுகாப்புணர்வாலும் தன்னிடமிருந்து எதையோ பறிக்க வருகிறானெனவும் நாம் எதையோ இழக்கப் போகிறோம் என்றும் நினைக்கும் போது உனக்கு மனதில் பல நினைவுகள் பாதுகாப்பற்று எழுகிறது அது இன்ப உணர்வைத் தராது, பேரின்ப தந்து அமைதி தராத ஒரு எண்ணத்தை கொண்டிருந்தால் தொடர்ந்து நீ அமைதியின்மையால் குழப்பமடைந்து துன்பமடைகிறாய், குறுகிய பொறாமையால் தவிக்கிறாய், இயலாமையில் கூனிக் குறுகுகிறாய். அகத்தை சீர் செய், அகத்தின் கசடை போக்க நல்ல எண்ணங்களை வலிந்துதான் பெற்றுக் கொள்ள வேண்டும். தேவையிலிருந்தும் ஆசையிலிருந்தும் வரும் எண்ணங்கள் வெவ்வேறு நிலையில் திரிபடைய வாய்ப்புள்ளது. கணித்தலும் விழிப்புணர்வும் மட்டுமே இயல்பான நல் எண்ணத்தை கொண்டு வரும், அதை வலிமையாக்கும். மேலும் அச்சத்தில்தான் பல வித பயவுணர்வுகளும் அது சார்ந்த பாதுகாப்பு அல்லது பாதுகாப்பற்ற எண்ணங்களை மனதில் கொண்டு வரும் என்ற அடிப்படையை நீ உணர வேண்டும். அதன் காரணங்களை ஆராய்ந்து, களைந்து, உணர்ந்து, திருத்தி அமைக்க வேண்டும். எண்ணத்தின் மூல வேரைப் பிடித்து உலுக்கி எடுக்க வேண்டும் இதுவொன்னும் சாதாரண வேலையில்லைதான் ஆனால் பழக்கத்திற்கு கொண்டு வா. பழகு, பழகிக் கொண்டேயிரு. உனக்கு பசிக்கிறதென வைத்துக் கொள், என்ன வகையான உணவை தேடிகிறது உன் மனம் என உணர்ந்து பார், தேவையினை ஒட்டியே உனது சிந்தனை எழும், பசிக்காத போதும் சாப்பிட வேண்டுமென எழுகின்ற ஆசையையும் உணர்ந்து பார், யோசி. நல்ல ருசியான சாப்பாடு கிடைத்தென நெஞ்சடக்குமளவு சாப்பிட்டு விட்டு செரிக்காமல் வயித்தால போகும் போது சிந்திக்கக் கூடாது. ஒன்றின் மீது வெறுப்பான எண்ணத்தையும் உமிழாது, ஒன்றின் மீது அதீத விருப்பான எண்ணத்தையும் பொழிய வேண்டுமா என யோசித்து நடை போடு. வாழ்க்கையை இரண்டின் மீதும் சரிசமமாக நடந்தே கடக்க முடியும் அதிலும் குறிப்பாக இன்பவுணர்வை மட்டுமே இயற்கை நமக்கு தர வேண்டுமென நினைக்கும் அதீத விருப்பமே, ஆசையே உன்னை துன்பத்தில் ஆழ்த்துகிறது. நீயே நினைத்துப் பார், எதன் மீதாவது அதீத ஆசை கொண்டு கற்பனை எண்ணத்தை அதனை நோக்கி ஓட்டுகிறாய் என்னாகின்றது எதிர்ப்பார்ப்பு ஏமாற்றமாகிறது அது அப்படியே கிடைக்க உனது எண்ணத்தில் உறுதியும் நுட்பமும் பெறு அல்லது அதனை அப்படியே ஏற்க பழகு. புறத்தை குறை கூறிக் கொண்டு அலையாதே. புறத்தைக் கண்டு அச்சப்படாதே. வெறுக்காதே, எரிச்சலுறாதே.புறம் அப்படியே இருக்கும் போது அகமே மாறிக் கொண்டே உள்ளது புரிந்து நட. புறத்தின் மாற்றம் அகத்தை பாதிக்கச் செய்து அதுவும் அகத்தையே மாற்றும் வல்லமை கொள்கிறதௌயும் பார், உற்றுக் கவனி உன் அகத்தை. இக்கல்வியை நீயே தேடித்தான் முயன்றுதான் பெற வேண்டியிருக்கும். தொடர்ந்து முயன்று பார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக