செவ்வாய், 16 ஏப்ரல், 2019

எண்ணமாயிரு - என்னமாவது இரு நல்லவனாயிரு - விஞ்ஞான மெய்ஞான பார்வை


எண்ணமாயிரு - என்னமாவது இரு ஆனா நல்லவனாயிரு விஞ்ஞான மெய்ஞானப் பார்வை 1. எண்ணமே செயலுக்கான வேர் எண்ணமும் சிந்தனையுமும் தேவைகளை ஒட்டியே எழுகின்றன உடல் தேவைகள் அல்லது மனத்தேவைகளை, தேவையிலிருந்து பிறந்த எண்ணங்கள் பின் ஆசையாக மாறி நம்மை சில நேரங்களில் தடமோ திசையோ மாறிச் செல்ல வைத்து விடுகிறது. எண்ணத்தின் வழிதான் மனம் ஓடிக் கொண்டும் ஊசலாடிக்கொண்டும் இருந்து கொண்டே இருக்கிறது. எண்ணங்கள் சோப்பு நுரை குமிழிகளைப் போல் மனதில் எழுந்த வண்ணமாகவே உள்ளன. ஒன்று இறந்த காலத்தின் செயல்களை நினைந்து சிந்தனை செய்கிறோம் அல்லது கற்பனையாக எதிர் காலத்தை நினைத்து சிந்திக்க ஆரம்பிக்கிறோம். மனம் எண்ணங்களினால் எதிர் எதிர் திசையில் பயணமாகிக் கொண்டே தம்மை தாமே சலித்துக் கொண்டும் செல்கிறது.எண்ண ஓட்டமே மனமாகிருக்கின்றது. எண்ணமே உன்னை செதுக்கும் சிற்பியாக உள்ளதென வேதாத்ரி சொல்கிறார். ஆம் நம்மை முழுதும் வடிவமாக எண்ணமே செதுக்கி வைக்கின்றது ஆழ்ந்து சித்திதால் நம் உருவம் கூட எண்ணத்தின் மொத்த உருவமாகவே இருக்கும். எண்ணத்திலிருந்து பிறக்கும் சொற்களாகத்தான் மனிதன் இருக்கிறான். எண்ணத்தை சீர் செய்யும் முயற்சியில் ஈடுபடாமல் இருந்தால் உன் வாழ்க்கையில் சரியான நேர்கோட்டு பாதையில் பயணிக்காதவனாக மாறிவிடுகிறாய். நீயே எண்ணமாயிருக்கிறாய். உனது எல்லா இன்ப துன்பகளுக்கும் இவ்வெண்ணமே மூலமாக, விதையாக உள்ளது அந்த எண்ணத்தின் மூலத்தை கண்டறிந்து சீர் செய்வதை தொடங்க வேண்டும். மனோ பலமும் பலகீனமும் எண்ணத்தின் வாயிலிலிருந்தே தொடங்குகிறது. எண்ணம் பலகீனமானால் உள்வட்டமும் உன் காந்தமும் பலகீனமாகி விடுகிறது. அகமும் புறமும் பலகீனப்பட்டு விடுகின்றன. அதே எண்ணம் பலமாக, வலிமையுடையதாக இருந்தால் உள் வட்டமும், காந்த பிரகாசமும் வெளியும் சிறந்த பலமும் வலிமையுடையதாய் மாறி விடுகின்றன. உனது விதியெனப்படுவது இவ்வெண்ணத்தின் படிமமே. சிறு வயது முதல் நீ எண்ணிய எண்ணத்தின் அனுபோக அனுபவ பதிவின் விளைவே. அவைகள் மூளையில் நிறைந்து வழிகிறது அதுதான் இன்றைக்கு செயலாக சொல்லாக மலர்ச்சி பெற்று வருகிறது என்ற உண்மையை ஆழமாக சிந்தித்த பின்னரே எண்ணத்திற்கும் சொல்லுக்கும் செயலுக்கும் மிகப்பெரிய தொடர் போராட்டம் நிகழ்வதை உணர்ந்து கொள்வாய். இயற்கையானது மனிதனுக்கு பலப்பல அனுபவங்களை தந்து கொண்டேயுள்ளது. அவ்வனுபவங்கள் அனைத்தும் நினைவுப் படுகைகளாக மாறி எண்ணமாக விரிகிறது. தீயது நல்லது என்ற , பகுப்பின்றி, பாகுபாடின்றி உன் மனதில் குமிழிகளாய் மேலெழுந்து வந்த வண்ணமே இருக்கின்றது. இனிமை, நிறைவு, மகிழ்ச்சி, அமைதி,இன்பம், அன்பு, சாந்தம், ஆனந்தம், பேரின்பம், பேராற்றல் என்ற சொற்களை நிதானைத்து மனதில் சொல்லிப் பாரு அந்த வார்த்தைகளை கேட்கும் போது உனக்குள் ஏற்படும் எண்ணத்தின் மாற்றத்தை எவ்வாறு உணர்கிறாய். அதுபோல் சோர்வு, நோய், சோகம், கவலை, பிணக்கு, சிக்கல், வலி, துக்கம், துன்பம், குழப்பம், பதற்றம் என்று நீ கேட்கும் போதும் நீ வேறு வகையாக உணர்கிறாய். அகத்திலிருந்து புறச்சிந்தனையிலும், புறச்சிந்தனையிலிருந்து அகத்திற்குள்ளும் நீ மாறி மாறி சென்றுக்கொண்டேயுள்ளாய். இந்த எண்ணத்தின் வழியில் நினைவாக, தொடர்ச்சியாக எழும் சிந்தனையின் வழியும், கற்பனையாக நினைவு வழியும் எண்ணம் தொடர்ந்து கொண்டேயுள்ளது. மனமும் அதன் பின் ஓடிக் கொண்டேயுள்ள போது செய்யும் செயலின் விளைவாக கிடைக்கும் அனுபோக அனுபவத்தை நீ பெற்றுக் கொண்டேயுள்ளாய். ஆற்று வெள்ளம் பள்ளத்தை நோக்கி விரைவது போல் உன் சிந்தனையின் வழியாகவே உனது ஆற்றல் அனைத்தும் முழுமையாக செயலாற்றுகின்ற உணர்வை நீ பெற வேண்டும். அப்படி ஊடும் நினைவலைகள் தீயவையாக இருந்தால், உனது ஆற்றல் முழுதும் தீயவையாக மாறி உன் ஆற்றல் களத்தை அது கெடுத்து விடுகின்றன. அவற்றை நீ மாற்றிக் கொள்வது மிக எளிதானதுதான். உன் நினைவு ஓட்டத்தை மடை மாற்றம் செய்ய வேண்டும் உனது கற்பனையானதை அவ்வெண்ண ஓட்டத்தை நல்ல விதமாக வலிந்து மாற்றிக் கொள்ள வேண்டும். சிலர் அப்படி செயற்கையாக மாற்ற வேண்டாம். நீ எல்லாவற்றையும் அனுபவிக்க வேண்டும் என்பார்கள் ஆனால் அவர்களால் சில எண்ணத்தால் செயலாகிய பழக்க வழக்கத்தை சட்டென மாற்ற இயலாமல் பலகீனமாக தவிப்பார்கள் உன் மனமும் தவிக்கும். இந்த இடத்தில் இவ்வாசகத்தை சொல்லிக் கொள். உண்மையின் பக்கம் சிலரே இருப்பினும் நான் உண்மையின் பக்கமே எப்போதும் இருப்பேன் என்று திரும்ப திரும்ப மனதிற்கு ஒரு தன்னம்பிக்கை அறிவுரை அறவுரை சொல்லிக்கொள்ள வேண்டும் இல்லையென்றால் உனது உணர்ச்சி வயமான எண்ணம் செயலாக மலர்ந்து விடும். ஒரு எண்ணத்தை நீ எண்ணும் போது உனக்கும் உன் உள்ளுணர்வுக்கும் எந்த சிக்கலும் பதற்றமும் பயமும் இல்லையோ அவையே நல்லதாக இருக்கும். எந்த எண்ணத்தை எண்ணும் போது உடலில் சுகமாகவும், இன்பமாகவும், அமைதியாகவும் இருக்கிரதோ அதை உள்ளுணர்வும் இதமாக ஏற்றுக் கொண்டால் மட்டும் அந்த எண்ணத்தை மனதில் சுழல விடலாம். இல்லையென்றால் அவற்றை தவிர்த்து விட வேண்டும். உன் உள்ளுணர்வுக்கு சரியென்று பட்டாலொழிய, உன் மனசாட்சி உறுத்தாமல் இருந்தாலொழிய, உன் அறிவு உறுத்தாமலிருந்தாலொழிய அந்த எண்ணத்தை நீ மனதில் சுழல விடலாம் மற்றவற்றை மனதில் சுழல விடுவது தவறாகி விடும். மனமும் அவ்வழியே பயணித்து நம்மை தவறான பாதைக்கு இழுத்துச் செல்லும். மனதின் நிலையே வாழ்வின் வளமாகும், எண்ணத்தின் வலிமையே, பலமே மனதின் மனிதனின் பலமாகவும் இருப்பதை நீ உணர்ந்து கொள். மனத்தின் பாங்கே மனிதனின் பாங்கு என வேதாத்ரி சொல்லியுள்ளார். மனம் செம்மையடைய செய்ய எண்ணத்தை செம்மையடையச் செய்ய வேண்டும். எண்ணமே இவ்வுடலையும் இயக்குகின்ற மாய வித்தையை மிக எளிமையாக நீ உணர்ந்து கொள்ளலாம் . நீ ஒரு திருவிழாவுக்கோ, சுற்றுலாவுக்கோ போக வேண்டுமென திட்டம் போட்டு அந்த எண்ணத்தை தீவிரமாக எண்ணி அந்த ஊரையோ, இடத்தையோ மனதில் கற்பனையாக நினத்து வருவாய் அப்படி செய்யும் பொதெல்லம் மனம் உடலை இயக்கி, செயலாற்றி உடலை தூக்கிக் கொண்டு அந்தா ஊருக்கு செல்ல அந்த திருவிழாவிற்கு செல்ல தயாராகி நிற்கும் அதற்கான எல்லா ஆயத்த வேலைகளையும் உன்னை நீயே இயக்கி செய்து முடிப்பாய் அதையே நீ பல முறை உன் அனுபவத்தில் கண்டிருப்பாய். உனது தொடர்ச்சியான எண்ணமே உனக்கான நட்பு வட்டத்தை அமைக்கும் நல்ல ஆசானை கொண்டு வந்து சேர்க்கும் அல்லது நீயே தேடி செல்வாய். ஒரு அரசியல் கருத்தை நோக்கி உன்னை ஈர்க்கும், சினிமாவை நோக்கி, சினிமா நடிகனையோ, நடிகையோ நோக்கி ஈர்த்து செல்லும், இசையை, பாடலை, கவிதையை, புத்தகங்களை, என பல விசயங்களை நோக்கி உன்னை ஈர்த்து செல்லும் அல்லது நீ அவற்றை ஈர்ப்பாய் இதைத்தான் ஒத்த அலை வரிசை என்று சொல்லுகிறோம். அந்த அலை வரிசையின் தொடக்கப் புள்ளி உனது எண்ணமே என்பதை உணர்ந்து கொள். எண்ணமே உணர்வாக எழுகிறது உணர்ச்சியாகவும் எழுகிறது என புரிந்து கொள். உனது மனதில் எழும் எல்லா உணர்வுகளுக்கும் மூலம், உன் எண்ணமே காரண கர்த்தா அப்படியென்றால் உன் எண்ணத்தை எவ்வாறான சீர் திருத்தத்திற்கு கொண்டு வர வேண்டுமென நீயே யோசி. உனது எண்ணத்தின் தொடக்கமே காதலாக, நட்பாக, சினமாக, காமமாக, விரசமாக, வஞ்சமாக, கற்பொழுக்கமாக, உயர்வு தாழ்வு மனப்பான்மையாக, சாதிப் பெருமையாக, மதச் சண்டையாக, கருத்து மோதலாக, சாந்தமாக, அமைதியாக, அன்பாக, கருணையாக, இரக்கமாக, ஈகையாக என எல்லா இன்ப துன்ப உணர்வுகளாக மலர்கிறது. அதைத் தொடர்ந்த்து அந்த எண்ணத்தின் அழுத்தமே செயலுக்கு வருகின்றது என்பதை நீ உணர்ந்து கொண்டு மெல்ல மெல்ல எண்ணத்தை உன் வழிக்கு கொண்டு வர வேண்டும், சீராக்கி, பண்பாக்கி, பக்குவப்படுத்த வேண்டும் அதையும் உன்னுடைய மனமேதான் செய்ய வேண்டுமே தவிர பிறர் யாராவது வந்து உனக்கு மாய வித்தை செய்து, ஒரு ஆள் வந்து மருந்து மாத்திரை தந்தோ, பூஜை செய்து மாற்றிக் கொள்ள வேண்டும் என்று மட்டும் நம்பிக் கொண்டிருக்காதே. அது உன் அகத்திலிருந்து எழுந்து வந்து மாற்றியமைக்க வேண்டிய பொறுப்பு உனக்கே வேண்டும் எண்ணத்தின் வழி வரும் சிந்தனையும் மரபு நம்பிக்கையுமே கோட்பாடாக மாறி வாழ்க்கை விழுமியங்களை கொண்டு வருகின்றன அதுவே ஒரு பண்பாடாகவோ வாழ்க்கைக் கோட்பாடாகவோ அமைகிறது. எண்ணமே வாழ்வின் வளத்தையும் பல நேரங்களில் சீர் படுத்தாத எண்ணங்களால் மனதிற்கும் வாழ்க்கைக்கும் சமூகத்திற்கு சீர் கேடாக அமைந்து அதுவே சமூகத்தின் நோய்க் கூறாக அமைந்துவிடுகிறது அதனால்தான் கருத்தியல்களை எதிர்ப்பதே நடக்கின்றது. சில நேரம் புதிய எண்ணக் கருத்துக்கு ஒத்து போகாத குழு சண்டைகள் அதிகமானதுமே காரணம். தண்ணீர் தன் மட்டத்தினை தானே தேர்ந்தெடுத்துக் கொள்வது போலவும் அத்தண்ணீரே தனது வடிவத்தினை தேர்வது போலவும் உனது எண்ணத்தின் விதியே உன் வாழ்வின் விதியாகவும் அமைகின்றன. பார் உற்று பார், உனது அகத்தை பார் நீ யாராக உள்ளாய் என தினமும் உன் எண்ணத்தை எண்ணி பார்த்துக் கொள். எல்லா வினைகளுக்கும் அதற்கு சமமான ஒரு எதிர் வினை உண்டு என்ற விதியைப் போலவே எண்ணம்தான் மூலம் எனவும் அதனை சார்ந்தே உனது சொல்லும் செயலும் மனத்தன்மையும் அமையும் என்பதே விதி, உண்மை புரிந்து கொள் மனமே. எண்ணம் – சொல் – செயல் என்ற இந்த அடிப்படை கோட்பாட்டில் எண்ணமே முதல் படியில் உள்ளது அந்த அடிப்படையில் எண்ணத்தில் விசமென்றல் எல்லாமும் விசமாகும் அந்த வேரில் நல்ல சீர் திருத்தத்தை அடிப்படையிலேயே கொண்டு வந்து விட்டால் அவ்வெண்ணத்தை வைத்தே நல்ல ஆராய்ச்சி செய்யவும் அறிவையும் சிந்தனை முறையையும் மாற்றி அமைக்கலாம் என்று ஒப்புக் கொள். எண்ணத்திலிருந்தே சிந்தனை மலருகிறது அதுவே பின்னாளில் அறிவுக் கோட்பாடாக மாறுகிறது என்ற உண்மையை புரிந்து கொள்ளும் மனதிற்கு வாழ்க்கையை எளிமையாக்கி துன்பத்திலிருந்து விடுபடவும். சிக்கலில் மாட்டிக் கொள்ளாமல் தப்பித்து நல்வாழ்வை எட்ட முடியுமென சுயமாக சிந்தித்து நம்பு. நீ எண்ணும் எண்ணம் இந்த பிரபஞ்சத்திலும் பதிந்து அவைகள் விளைவாக மலர்கிறதென்ற விஞ்ஞானத்தை புரிந்து கொண்டு செயலாற்று. #துவாரகா சாமிநாதன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக